Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழக காவல்துறையில் இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா: விசாரணை வேண்டும் என்கிறார் அன்புமணி

தமிழக காவல்துறையில் இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா: விசாரணை வேண்டும் என்கிறார் அன்புமணி

தமிழக காவல்துறையில் இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா: விசாரணை வேண்டும் என்கிறார் அன்புமணி

தமிழக காவல்துறையில் இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா: விசாரணை வேண்டும் என்கிறார் அன்புமணி

ADDED : அக் 09, 2025 05:40 PM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழக காவல்துறையில் இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டதா? விசாரணை வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக காவல்துறைக்கு 621 சார் ஆய்வாளர்களை நியமிப்பதில் ஒன்றரை ஆண்டுகளாக நிலவி வந்த குளறுபடிகள் ஒருவழியாக முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், விடுதலைக்குப் பிறகு தமிழகத்தில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் ஆன பிறகும் அதை செயல்படுத்துவதில் நடக்கும் குழப்பங்களைப் பார்க்கும் போது கடந்த காலங்களில் இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டதா? என்ற ஐயம் எழுகிறது. இந்த விவகாரத்தில் திமுக அரசு கடைபிடிக்கும் அமைதி கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக காவல்துறைக்கு 621 சார் ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், அதில் இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில் நிகழ்ந்த குளறுபடிகளை சரி செய்யும்படி ஆணையிட்டது.

அதன்படி பழைய பட்டியலில் இருந்து 41 பேரை நீக்கி விட்டு, புதிதாக 41 பேர் சேர்க்கப்பட்டதாகக் கூறி கடந்த ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி புதிய பட்டியல் ஒன்றை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதையும் ரத்து செய்து விட்ட சென்னை உயர்நீதிமன்றம், உதவி ஆய்வாளர் தேர்வில் 69சதவீத இடஒதுக்கீட்டை

செயல்படுத்திய விதம் தவறு என்றும் தீர்ப்பளித்தது.

மேலும், ஜம்மு & காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பால் வசந்தகுமார் கண்காணிப்பில் புதிய பட்டியலைத் தயாரிக்கவும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதன்படி புதிய பட்டியல் தயாரிக்கப்பட்ட நிலையில், அதிலும் குளறுபடிகள் இருப்பதாக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியமே குற்றஞ்சாட்டியது. அந்தப் பட்டியலை ஏற்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், நீதியரசர் பால்வசந்தகுமார் மிகச் சரியாக பட்டியலைத் தயார் செய்திருப்பதாகவும். அந்தப் பட்டியலை அடுத்த ஒரு மாதத்திற்குள் வெளியிடும்படியும் ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் சமூகநீதி பலி கொடுக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் அரசுப் பணியாளர் தேர்வில் இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்படுவது இது முதல் முறையல்ல, கடந்த 2020-ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளுக்கு முதுநிலை ஆசிரியர்களை நியமிப்பதிலும் இதே போன்ற விதிமீறல்கள் நடந்தன. இந்த வழக்கின் தீர்ப்பு தான் வி.கே. சோபனா க்ஷிவி தமிழக அரசு என்றழைக்கப்படும் வழிகாட்டி தீர்ப்பு

ஆகும்.

கடந்த காலங்களில், குறிப்பாக 69 சதவீத இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டபிறகு, ஒவ்வொரு ஆள்தேர்விலும் அந்த இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us