போலீஸ் விசாரணையில் தப்பிய இளைஞர் மரணம்
போலீஸ் விசாரணையில் தப்பிய இளைஞர் மரணம்
போலீஸ் விசாரணையில் தப்பிய இளைஞர் மரணம்
ADDED : அக் 09, 2025 06:34 PM

மதுரை : போலீஸ் விசாரணையில், தப்பி ஓட முயன்ற இளைஞர் கழிவுநீர் கால்வாயில் மூழ்கி இறந்தார்.
மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சந்தேகத்திற்குரிய நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வண்டியூர் கல்மேடு பகுதி தினேஷ்குமார், 30, அஜித்குமார், 30, பிரகாஷ், 29, ஆகியோரை அண்ணாநகர் போலீசார் வண்டியூர் டோல்கேட் அருகே போலீஸ் அவுட்போஸ்ட்டிற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்து, காலை, 10:30 மணியளவில் ஸ்டேஷனுக்கு அழைத்துச்செல்ல வேனில் ஏற்றினர்.
அப்போது, தினேஷ்குமார் தப்பி ஓடினார். அவரை போலீசார் துரத்தினர். வழியில் வண்டியூர் கழிவுநீர் கால்வாயை தினேஷ்குமார் தாண்ட முயன்றபோது தவறி விழுந்து மூழ்கினார். போலீசார், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நீண்ட நேரம் தேடி, தினேஷ்குமார் சடலத்தை மீட்டனர். இதற்கிடையே, தினேஷ்குமாரை போலீசார் அடித்துக்கொலை செய்ததாக கூறி, அவரது உறவினர்கள் மதியம் அண்ணாநகர் ஸ்டேஷனை முற்றுகையிட்டு மறியிலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


