கல்வித்துறை சீரமைப்பில் அக்கறை காட்டாதது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி
கல்வித்துறை சீரமைப்பில் அக்கறை காட்டாதது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி
கல்வித்துறை சீரமைப்பில் அக்கறை காட்டாதது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி
ADDED : ஜூன் 10, 2025 04:37 PM

சென்னை: கல்வித்துறை சீரழிவால் தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகும் நிலையில், அதை சீர் செய்ய அரசு அக்கறை காட்டாதது ஏன் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
நாடு போற்றும் நல்லாட்சி என்று நாளிதழ்களில் விளம்பரம் செய்வதில் காட்டும் அக்கறையை, நம் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் கல்வித்துறையை சீரமைப்பதில் அரசு காட்டாதது ஏன்?
தகுதித் தேர்வில் வென்ற இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணியாணை வழங்காமை, போதிய வகுப்பறை வசதியின்மை, மாணவர்களே கழிவறையை கழுவும் நிலை, பெயர்ந்து விழும் பள்ளிக்கூரைகள் எனப் பள்ளிக்கல்வித்துறை சீரழிந்து வரும் வேளையில், தற்போது அரசுப் பள்ளிகளில் 20,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இது போதாதென்று, 7,000க்கும் மேற்பட்ட போராசிரியர்கள் பற்றாக்குறை, 4,000 உதவிப்போராசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்படாதது, துணை வேந்தர் நியமனத்தில் இழுபறி, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி, பல்கலைக்கழகத்தில் நிதி பற்றாக்குறை, வினாத்தாள் கசிவு, பல்கலையில் மதப்பிரசாரம் என உயர்கல்வித்துறையும் சீரழிந்து வருவது தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தைக் கிளப்புகிறது.
ஒரு காலத்தில் ஆன்றோர்களால் கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என போற்றப்பட்ட மாநிலம், தற்போது புகார்களின் கூடாரமாகி, படிக்கும் மாணவர்கள் மற்றும் படித்து முடித்த பட்டாதாரிகள் என அனைவரின் எதிர்காலத்தையும் ஒரு சேர அழித்து, கல்வியிற் சீரழிந்த தமிழ்நாடாக திராவிட மாடல் அரசு உருமாற்றி வருவது மிக்வும் கொடுமையானது.
ஆனால் இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாது, அப்பா பல்கலை வேந்தர் என தினந்தோறும் புதிய பட்டங்களைப் பெறும் ஆசையில், கல்வித்துறையில் தொடர்ந்து எழுந்து வரும் புகார்களை அலட்சியம் செய்து, புதுப்புது விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 19,260 பணியிடங்கள் 18 மாதங்களில் நிரப்ப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு அறிகுறி கூட தி.மு.க., ஆட்சியில் தென்படவில்லை என்பதே உண்மை.
நுாற்றுக்கு நுாறு சதவிகிதம் எல்லா நன்மையும் முன்னேற்றமும் தனது குடும்பத்திற்கு கிடைக்க வேண்டும் என காட்டும் அக்கறையை, நம் தமிழக மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்று கல்வியில் சிறந்து விளங்கவும், பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலை பெற்று வாழ்வில் முன்னேறுவதற்கும் காட்ட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.