Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அதிபர் விளாடிமிர் புடினுடன் இன்று பேச்சு

ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அதிபர் விளாடிமிர் புடினுடன் இன்று பேச்சு

ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அதிபர் விளாடிமிர் புடினுடன் இன்று பேச்சு

ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அதிபர் விளாடிமிர் புடினுடன் இன்று பேச்சு

ADDED : ஜூலை 09, 2024 01:35 AM


Google News
Latest Tamil News
மாஸ்கோ, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின், முதன் முறையாக, இரு நாட்கள் அரசு முறை பயணமாக, அந்நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, அதன் அண்டை நாடான ரஷ்யா, 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது. இரு ஆண்டுகளை கடந்தும் இரு நாடுகளுக்கு இடையே மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியா - ரஷ்யா இடையிலான, 22வது வருடாந்திர உச்சி மாநாடு, ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க, டில்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார்.

ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின், ரஷ்யாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. கடைசியாக, 2019ல் ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். மேலும், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின், ரஷ்யாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது.

மாஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ரஷ்யாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். தொடர்ந்து, ரஷ்ய படையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். இந்த காரில், அவருடன், ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் உடன் சென்றார்.

ஹோட்டலுக்கு வெளியே திரண்ட ஏராளமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, பிரதமர் மோடியை வரவேற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரவு விருந்து அளித்தார்.

மாஸ்கோவில் இன்று, இந்தியா - ரஷ்யா இடையிலான, 22வது வருடாந்திர உச்சி மாநாடு நடக்கிறது. இதில், பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில், வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு ஆகிய துறைகளில், இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து, இரு நாடுகளின் தலைவர்களும் விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

ரஷ்ய சுற்றுப்பயணத்தை இன்று முடித்துக் கொண்டு, மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவுக்கு, பிரதமர் மோடி செல்ல உள்ளார். 40 ஆண்டுகளுக்குப் பின், அந்நாட்டிற்கு இந்திய பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

சென்னை- - விளாடிவோஸ்டாக் சரக்கு போக்குவரத்து திட்டம்

பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தில், சென்னை- - விளாடிவோஸ்டாக் கடல்வழி சரக்கு போக்குவரத்து வழித்தடத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான போர் சூழல், சரக்கு கப்பல்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள் ஆகியவை சர்வதேச வர்த்தகத்திற்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன.இதனால், 10,458 கி.மீ., தொலைவு கொண்ட சென்னை -- விளாடிவோஸ்டாக் வழித்தடத்தைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இந்த வழித்தடம், ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இருக்கும் முக்கிய நகரமான விளாடிவோஸ்டாக் துறைமுகத்தையும், இந்தியாவின் தென்கிழக்கு துறைமுக மையமாக இருக்கும் சென்னையையும் இணைக்கும்.இத்திட்டம், இந்தியா -- ரஷ்யா இடையிலான இருதரப்பு பொருளாதார ஒப்பந்தத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த கடல் வழித்தடத் திட்டம், 2019 செப்டம்பரில் முன்மொழியப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி, விளாடிவோஸ்டாக்கில் நடந்த கிழக்கு பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது, இந்தியா - ரஷ்யா இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, சென்னை துறைமுகத்திற்கும், விளாடிவோஸ்டாக் துறைமுகத்திற்கும் இடையே கடல் வழித்தடம் அமைக்கப்படும்.இதன் வாயிலாக, நிலக்கரி, எண்ணெய், திரவ இயற்கை எரிவாயு, உரங்கள், கொள்கலன்கள் மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு வர்த்தகத்தில், ஏற்கனவே ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்டு வரும் பிற சரக்குகளையும் கையாள முடியும். கொரோனா காரணமாக, 2022 வரை, இத்திட்டத்தில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. தொடர்ந்து, ரஷ்யா - உக்ரைன் போரால், இது குறித்த பேச்சு முடங்கியது. பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தால், தற்போது இந்த வழித்தடத் திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்தால், சென்னை முக்கிய துறைமுகமாக மாறுவது மட்டுமின்றி, 10 நாடுகளில் இருந்து பொருட்களை குறைந்த கட்டணத்தில் இறக்குமதி செய்ய முடியும். இதனால், சென்னையில் சரக்கு போக்குவரத்து அதிகரிப்பதுடன், அதிகளவில் உற்பத்தி தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், ஏற்றுமதி ஆகியவை உயரும்.ஏற்கனவே, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கிலிருந்து, நம் நாட்டின் மும்பை துறைமுகத்துக்கு கடல்வழி சரக்கு போக்குவரத்து வழித்தட திட்டம் பயன்பாட்டில் உள்ளது.16,066 கி.மீ., துாரம் உடையது. இந்த இரு நகரங்களை அடைய, 40 நாட்கள் பயணிக்க வேண்டியிருக்கும். ஆனால், விளாடிவோஸ்டாக் - சென்னை இடையிலான பயண காலம், 24 நாட்கள் மட்டுமே.



(மேப்பிற்கான விளக்கம்)

இந்தியா - ரஷ்யா இடையேகடல்வழிப் போக்குவரத்துநடைமுறையில் உள்ளகடல்வழிப் போக்குவரத்துமும்பை துறைமுகம் - செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுகம் (பயண தொலைவு: 16,066 கி.மீ.,)(வழி மார்க்கம்: அரபி கடல், மத்திய தரைக்கடல், வடக்கு கடல், சூயஸ் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளை கடந்து செல்லும்பயண நாட்கள்: 40)முன்மொழியப்பட்டுள்ளகடல்வழிப் போக்குவரத்துசென்னை துறைமுகம் - விளாடிவோஸ்டோக் துறைமுகம்(பயண தொலைவு: 10,458 கி.மீ.,)(வழி மார்க்கம்: வங்காள விரிகுடா, தாய்லாந்து, சீனா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா மற்றும் ஜப்பான் கடற்பகுதிகளை கடந்து செல்லும்பயண நாட்கள்: 24)







      Our Apps Available On




      Dinamalar

      Follow us