ரஷ்யாவின் அதிநவீன '3டி பிரின்டர்': விரைவில் இந்தியா கொண்டு வர திட்டம்
ரஷ்யாவின் அதிநவீன '3டி பிரின்டர்': விரைவில் இந்தியா கொண்டு வர திட்டம்
ரஷ்யாவின் அதிநவீன '3டி பிரின்டர்': விரைவில் இந்தியா கொண்டு வர திட்டம்
ADDED : செப் 26, 2025 12:39 AM

மாஸ்கோ: ரஷ்யாவின், 'ரோசாட்டம்' நிறுவனம் உருவாக்கியுள்ள அதிநவீன, 'எலக்ட்ரான் பீம் 3டி பிரின்டர்' விரைவில் இந்தியா வர உள்ளது. 'இதில் பணத்தைத் தவிர மற்ற அனைத்தையும் அச்சிட முடியும்' என, கூறப்படுகிறது.
ரஷ்யாவின், 'ரோசாட்டம் ஸ்டேட் கார்ப்பரேஷன்' என்ற அரசு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, 'எலக்ட்ரான் பீம் 3டி பிரின்டர்' விரைவில் இந்தியா வரவுள்ளது.
இந்த அதிநவீன இயந்திரம், ராக்கெட்டுகள், அணு உலைகள் போன்ற அதிநவீன தொழில்நுட்பத் துறைகளுக்கு தேவையான துல்லியமான பாகங்களை உருவாக்கும் திறன் உடையது.
இந்த பிரின்டரில், 'அ டிக்டிவ் மேனுபாக்சரிங்' என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில், டைட்டானியம் மற்றும் பிற உலோகங்களின் பொடிகளை உருக்கி, செதுக்கி, சிக்கலான பாகங்களையும் உருவாக்க முடியும்.
இதில் பொருட்கள் அடுக்கடுக்காக உருவாக்கப்படுவதால், பாரம்பரிய முறைகளை விட குறைந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி சிக்கலான வடிவமைப்புகளையும் இதன் வாயிலாக உருவாக்க முடியும்.
இத்தொழில்நுட்பம் விண்வெளி, பாதுகாப்பு, அணுசக்தி துறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், உற்பத்தி செலவுகளை குறைத்து, வளர்ச்சிக்கான செயல்முறை களை வேகப்படுத்த உதவும்.
இந்த இயந்திரம், நம் அரசின், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், உயர் தொழில்நுட்ப உற்பத்தியை உள்நாட்டிலேயே மேம்படுத்த உதவும் என்பதால், இந்த இயந்திரத்தை இந்தியா கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மதிப்பு 20 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. மேலும், இது இந்தியாவின் ரகசியமான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.