ஒரே நேரத்தில் இரு கைகளாலும் வேகமாக எழுதும் ஆதி ஸ்வரூபா
ஒரே நேரத்தில் இரு கைகளாலும் வேகமாக எழுதும் ஆதி ஸ்வரூபா
ADDED : ஜூன் 14, 2026 11:37 PM

- நமது நிருபர் -
கரும்பலகை அல்லது பேப்பரில் ஒரு கையில் வேகமாக எழுதவே பலருக்கு வராது. நேராக எழுதாமல் கோணலாக எழுதி கொண்டு இருப்பர். ஆனால், 21 வயது இளம்பெண் ஒருவர், ஒரே நேரத்தில், இரு கைகளிலும் வேகமாக எழுதுகிறார். அவரது பெயர் ஆதி ஸ்வரூபா. மங்களூரு டவுன் கொடியாலுபைல் பகுதியில் வசிப்பவர்.
இரு கைகளாலும் எழுதுவது பற்றி அவர் கூறியதாவது:
என் பெற்றோரான தந்தை கோபட்கர், தாய் சுமாகர், எனக்கு இரண்டரை வயதாக இருக்கும் போதே, என்னிடம் ஓவிய புத்தகங்களை கொடுத்து உள்ளனர். வலது கையில், 'ஸ்கெட்ச்' பிடித்து ஏதேதோ வரைந்து உள்ளேன். சில நாட்களில் இடது கையிலும் ஸ்கெட்ச் பிடித்து உள்ளேன்.
பேனா கொடுத்தாலும் இரு கையிலும் கிறுக்க ஆரம்பித்து உள்ளேன். என்னால் ஒரே நேரத்தில் இரு கையிலும் எழுத முடியும் என்று உணர்ந்த பெற்றோர், இரு கையிலும் எழுதவும் பயிற்சி கொடுத்து உள்ளனர்.
அது அப்படியே பழக்கமாக மாறி விட்டது.
தற்போது, 15 நிமிடத்தில் இரு கைகளை பயன்படுத்தி என்னால், 36 வரிகளை எழுத முடிகிறது. எனது சாதனையை அங்கீகரிக்கும் வகையில், நான் இரு கையிலும் எழுதுவதை வீடியோ, புகைப்படம் எடுத்து, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனத்திற்கு என் பெற்றோர் அனுப்பினர்.
அவர்களும் எனது திறமையை அங்கீகரித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினர். சிறுவர், சிறுமியரின் திறமைகளை வெளிகொண்டு வரும் வகையில், பெற்றோருடன் சேர்ந்து, பயிற்சி மையம் நடத்துகிறேன். என்னை போன்று மற்றவர்களுக்கும் இரண்டு கைகளில் எழுத வேண்டும் என ஆசை உள்ளது. பலருக்கு இதுகுறித்து பயிற்சி அளிக்கிறேன்.
ஓவியம் வரைவதிலும் எனக்கு ஆர்வம் உள்ளது.
எனக்கு எதிரில் அமர்ந்து இருப்பவர்களை பார்த்தே, ஐந்து நிமிடத்தில் வரைந்து கொடுத்து விடுவேன்.
இந்த உலகம் போட்டி நிறைந்தது. இதில் தங்களை மேம்படுத்தி கொள்ள இன்றைய தலைமுறையினர், நிறைய திறமைகளை வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
