PUBLISHED ON : ஏப் 03, 2026 03:46 PM

அ நிறம் | அளவு
'ஒரு ஓட்டுதானே... அது இல்லை என்றால் என்ன ஆகிவிடப்போகிறது?' என்று நினைக்கும் இளைய தலைமுறைக்கு, அசாம் மாநிலம் குவஹாத்தியைச் சேர்ந்த 96 வயது முதியவர் ஜதிந்திர சந்திர நாத் ஒரு மாபெரும் பாடமாகத் திகழ்கிறார்.
அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 'யாரும் விடுபடக்கூடாது' என்ற தேர்தல் ஆணையத்தின் உன்னதக் கொள்கை, ஜதிந்திரரின் படுக்கையறையில் நிஜமானது.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் வாக்குச்சாவடிக்கு வர இயலாத நிலையில் இருந்த இவருக்கு, தேர்தல் ஆணையம் தபால் வாக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. அதிகாரிகள் குழு, முழுமையான பாதுகாப்புடனும், ரகசியத் தடுப்புகள் மற்றும் வாக்குப்பெட்டியுடனும் அவரது வீட்டிற்கே சென்றனர். சில நிமிடங்களிலேயே அந்த முதியவரின் வீட்டின் ஒரு பகுதி, ஒரு குட்டி 'வாக்குச்சாவடியாக' உருமாறியது.
தனது தள்ளாத வயதிலும், நடுக்கமுற்ற கைகளுடனும், மிகுந்த தெளிவான மனதுடன் அவர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றி, தபால் வாக்கைப் பதிவு செய்தார்.வாக்குப்பதிவு முடிந்ததும், அவரது விரலில் வைக்கப்பட்ட அந்த அழியாத மையை அவர் மீண்டும் மீண்டும் பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த ஒற்றைப் புள்ளி மையில், 'இந்த நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் எனக்கும் பங்கு இருக்கிறது' என்ற ஆத்ம திருப்தி தெரிந்தது. 96 ஆண்டுகால வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்களைக் கண்ட அந்த விழிகள், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையில் இன்று மின்னின.


96 வயதில், படுக்கையில் இருந்தபடியே ஒரு முதியவர் ஓட்டுப் போடும்போது, உடல்நலம் குன்றாத நாம் ஏன் தயங்க வேண்டும்? 'என்ன வெயில்!' என்று வீட்டிற்குள் முடங்காமல், நாட்டின் தலையெழுத்தை மாற்ற அந்த ஒரு மணிநேரம் ஒதுக்குங்கள். உங்கள் ஒரு வாக்கு, தகுதியான ஒருவரை அரியணையில் ஏற்றலாம் அல்லது தவறான ஒருவரைத் தடுத்து நிறுத்தலாம். வாக்களிப்பது என்பது வெறும் உரிமை மட்டுமல்ல, அது நம் தேசத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை.
'தள்ளாத வயதில் ஜதிந்திர சந்திர நாத் காட்டிய அந்த உறுதி, ஓட்டுப் போடத் தயங்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் விடப்பட்ட சவால்! விரலில் வைக்கும் மை, வெறும் அடையாளம் அல்ல; அது உங்கள் அதிகாரத்தின் பிரகடனம்!'
வாக்களிப்போம்! ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்!
-எல்.முருகராஜ்


