Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

மீனம்ரகசியங்களை பாதுகாப்பதில் வல்லவரான மீன ராசி அன்பர்களே!

இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 6ம் இடமான சிம்ம ராசியில் இருந்தார். அங்கு அவர் மன நிம்மதியை இழக்க செய்திருப்பார். உங்கள் நிலையில் இருந்து தடுமாற்றத்தை உண்டு பண்ணியிருப்பார். பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும். வீண் பகையும், விரோதமும் உருவாகியிருக்கும். பல்வேறு தொல்லைகளை அனுபவித்து இருப்பீர்கள். அதேபோல சனிபகவானும்,கேதுவும் தடைகளை உருவாக்கி இருக்கலாம். ராகுவால் நன்மை கிடைத்திருக்கலாம். இந்த நிலையில் தற்போது குரு பகவான் 6 ம் இடத்தில் இருந்து 7ம் இடமான கன்னி ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான நிலையாகும். குரு பலத்தால் பொற்கால வாழ்வு பெறுவீர்கள். தொழில் வளர்ச்சியால் மண்ணும் பொன்னாகும் நிலை காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி ஆடம்பர முறையில் நிறைவேறும். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் தாராள செலவில் பூர்த்தியாகும். வசதி வாய்ப்பு பெருகும். குருவின் 5ம் இடத்துப் பார்வை மகரத்தில் விழுவதன் மூலம் பொருளாதார வளம் சிறக்கும். சனிபகவான் 9ம் இடத்தில் இருக்கிறார். அங்கு அவரால் எதிரி தொல்லை தலைதுõக்கும், பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம். சனி பகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். இருக்கும் ராசியில் இருந்து 3,7,10ம் இடங்களை பார்ப்பதன் மூலம் வாழ்வு சிறக்கும்.

ராகு 6ம் இடமான சிம்மத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம். அவர் உங்களை தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். செயலில் வெற்றியைக் கொடுப்பார். முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்களின் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். கேது உங்கள் ராசிக்கு 12ம் இடமான கும்பத்தில் இருப்பது சிறப்பானதல்ல. இதனால் பொருள் விரயமும், உடல் நலக்குறைவும் உண்டாகலாம். சுய கவுரவத்திற்காக ஆடம்பர
எண்ணத்துடன் செலவு செய்வீர்கள். சிக்கனமாக இருப்பது அவசியம். முயற்சியில் அவ்வப்போது தடைகள் குறுக்கிட்டாலும், குருவின் பார்வையால் முறியடிப்பீர்கள். கடந்த காலத்தில் இருந்த அவப்பெயர் இனி மறையும். உங்களை பழித்தவர் கூட மனம் திறந்து பாராட்டும் நிலை உருவாகும். கணவன், மனைவி இடையே அன்பு ஊற்றெடுக்கும். உறவினர்கள் வகையிலும் அனுகூலமான போக்கு காணப்படும். அவர்களின் வருகையால் நன்மை உண்டாகும். திருமணம் போன்ற சுபவிஷயங்கள் திட்டமிட்டபடி சிறப்பாக நடந்தேறும். வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டாகும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் சூழ்நிலை ஏற்படும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மனதிலும் புத்துணர்ச்சி மேலோங்கும். கேதுவால் அவ்வப்போது உடல் உபாதை வந்தாலும் விரைவில் பறந்தோடும்.

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் குருவின் பலத்தால் போதிய வருமானம் கிடைக்கும். பொறுப்பு அதிகரிப்பதால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கடந்த கால முயற்சிக்கு தகுந்த உயர்வான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக தானிய வியாபாரம் சிறப்பாக இருக்கும். இரும்பு, தரகு சம்பந்தமான தொழிலில் ஈடுபடுபவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கப் பெறுவீர்கள். அறிவைப் பயன்படுத்தி தொழிலில் வளர்ச்சியடைவீர்கள். சேமிக்கும் விதத்தில் லாபம் வந்து சேரும்.

பணியாளர்கள்: பணியாளர்கள் கடந்த காலத்தில் வேலைப்பளு, வீண் அலைச்சலால் சிரமத்தைச் சந்தித்திருப்பர். பணியிடத்தில் பின்தங்கிய நிலை மாறும். வேலையில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வேலைப்பளுவும் படிப்படியாகக் குறையும். தடைபட்டு வந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் மத்தியில்
நன்மதிப்பு உண்டாகும். உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். விரும்பிய இட, பணி மாற்றம் கிடைக்க பெறுவீர்கள். வேலை இன்றி இருப்பவர்கள் சற்று முயற்சி செய்தாலும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

கலைஞர்கள்: கலைஞர்கள் கடந்த காலத்தை விட வெகுவாக முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் பெறுவதில் தடையேதும் இருக்காது. எதிர்பார்த்த மதிப்பு பாராட்டு போன்றவை கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்பு
உண்டாகும். போதிய வருமானமும் கிடைக்கும். தொண்டர் மத்தியில் செல்வாக்கு உயரும். தலைமையின் நன்மதிப்பை பெற்று வளர்ச்சி காண்பீர்கள்.

மாணவர்கள்: மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு சுமாராக இருந்திருக்கும். முயற்சிக்கு தகுந்த பலன் கிடைத்திருக்கும். ஆனால் வரும் கல்வி ஆண்டு குரு பலத்தால்
சிறப்பாக இருக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். போட்டிகளில் பங்கேற்று பரிசு, பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள்.

விவசாயிகள்; விவசாயிகள் அதிகமாக பாடுபட வேண்டி இருக்கலாம். ஆனால், உழைப்புக்கு ஏற்ப வளர்ச்சி அடைவது உறுதி. நெல், கோதுமை, பழவகைகள், கேழ்வரகு போன்ற பயிர்களிலும் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவீர்கள். கூலி வேலை செய்பவர்கள் அதிக நேரம் உழைக்க நேர்ந்தாலும், நிம்மதியான வாழ்வு அமையப் பெறுவர். வழக்கு
விவகார முடிவு சுமாராகவே இருக்கும். பாதிப்பு ஏற்படும் நிலைக்கு போகாது.

பெண்கள்: பெண்கள் மகிழ்ச்சியான வாழ்வு அமையப் பெறுவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். நீண்ட காலம் குழந்தை இல்லாத பெண்கள் மழலைச் செல்வம்
கிடைக்கப் பெறுவர். ஆடம்பர செலவை குறைப்பது புத்திசாலித்தனம். வேலை பார்க்கும் பெண்கள் பணியிடத்தில் சுதந்திர மனப்பான்மையுடன் இருப்பர்.

பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நன்மைஅளிக்கும். சனி, கேதுவுக்கு அர்ச்சனை செய்வது அவசியம். புதனன்று பெருமாள் கோவிலுக்கு செல்வது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us