Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

தனுசுதன்னலம் கருதாமல் பாடுபடும் தனுசு ராசி அன்பர்களே!

ராசிக்கு 11-ம் இடத்தில் இருந்து நன்மை செய்த குரு அக். 4ல் 12ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். இது சுமாரான நிலையே. இதனால் பொருள் விரயம் ஏற்படலாம். வீண் அலைச்சல் உருவாகலாம். இதனால் மனம் வருந்த வேண்டாம். குரு பகவான் கெடுபலன் அளித்தாலும் அது நன்மையாக முடியும். குரு சாதகமற்று இருந்தாலும் அவரது பார்வை மூலம் நற்பலன் கிடைக்கப் பெறுவீர்கள். குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டு. சனிபகவான் உங்கள் ராசியில் இருப்பதால் ஏழரை சனியின் தாக்கத்தாலும் சிரமம் குறுக்கிடும். உறவினர் வகையில் வீண் மனக்கசப்பு வரலாம்.   

ராகு 8-ம் இடமான கடகத்தில் இருப்பதும் சிறப்பானதல்ல. முயற்சியில் தடை உருவாகலாம். 2019 பிப்.13ல் அன்று ராகு 7-ம் இடமான மிதுனத்திற்கு வருவதும் நல்லதல்ல. அவப்பெயரை சந்திக்க நேரலாம். கேது தற்போது உங்கள் ராசிக்கு 2-ம் இடமான மகரத்தில் இருப்பதும் நன்மை இல்லை. 2019 பிப்.13ல் கேது உங்கள் ராசிக்கு மாறிய பின் செயலில் தடை, உடல் உபாதை  ஏற்படலாம். மொத்தத்தில் குரு, சனியால் நல்ல காலம் பிறக்கும் வரை பொறுமை காப்பது நல்லது.

இனி பொதுவான பலனைக் காணலாம். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் கண்டு மகிழ்வீர்கள். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.  சகோதரவழியில் சுபநிகழ்ச்சிகளுக்காக பெரிய அளவில் செலவழிக்க முன்வருவீர்கள். பொருளாதாரம் சீராக இருக்கும். சமுகத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். 2019 மார்ச் 13க்கு பிறகு  கெடுபலன் குறையும்.  குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும்.
தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.  குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் குதுாகலம் உண்டாகும்.  திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு, வீண் அலைச்சல் இருக்கும். சிலர் பொறுப்புகளை இழக்க நேரிடலாம் கவனம். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். கோரிக்கை நிறைவேற தீவிர முயற்சி தேவைப்படும். வெளியூர் பயணத்தாலும் சிரமத்திற்கு ஆளாகலாம். இருப்பினும் குருவின் 7-ம் இடத்துப் பார்வையால் பிரச்னைக்கான தீர்வும் கிடைக்கும்.  

தொழில், வியாபாரத்தில் உழைப்பு அதிகமாகவும், ஆதாயம் குறைவாகவும் இருக்கும்.  சிலருக்கு வீண் விரோதம் வர வாய்ப்பு உண்டு. எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பேசவும். புதிய பங்குதாரர்களை தொழிலில் சேர்ப்பதை தவிர்க்கவும். அரசிடம் இருந்து எதிர்பார்த்த சலுகை கிடைக்காமல் போகும். புதிய வியாபார முயற்சி தற்போது வேண்டாம். சட்ட விரோதமான வகையில் சம்பாதிக்க நினைக்காதீர்கள். குருவின் பார்வை பலத்தால் நல்ல நண்பர்கள், பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில்கள் வளர்ச்சி பெறும்.

கலைஞர்கள் சேவை நோக்கில் செயல்பட வேண்டியிருக்கும். புதிய ஒப்பந்தம் கிடைத்தாலும் அதற்குரிய பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். இருந்தாலும் எதிர்கால நன்மை கருதி புதிய வாய்ப்பை சரியாக பயன்படுத்துங்கள். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது. மறைமுகப்போட்டி அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்பு குறைவு. 2019 மார்ச் 13க்கு பிறகு ஓரளவு நன்மையை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் அயராது உழைத்து முன்னேறுவர். கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை அமையப் பெறுவர். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். 2019 மார்ச் 13க்கு பிறகு போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

விவசாயிகள் சீரான மகசூல் கிடைக்கப் பெறுவர். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வழக்குகளில்  பாதகமான முடிவு கிடைக்க வாய்ப்புண்டு. புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை. 2019 மார்ச் 13க்கு பிறகு அரசு வகையில் சலுகை கிடைக்கும். நெல், சோளம், கேழ்வரகு போன்ற பயிர்கள் மூலம்  வருமானம் கிடைக்கும்.  பெண்களுக்கு சுபச்செலவு அதிகரிக்கும்.  பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும். உறவினர் வழியில் அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். 2019 மார்ச் 13 க்கு பிறகு  மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.  சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் முன்னேற்றம் அடைவர். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம்:
●  சனியன்று சனீஸ்வரருக்கு எண்ணெய் தீபம்
●  வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு  அர்ச்சனை
●  வெள்ளியன்று பசுவுக்கு  அகத்திக்கீரை


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us