Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

துலாம்நல்லோர் நட்பை விரும்பும் துலாம் ராசி அன்பர்களே!
இந்த சார்வரி ஆண்டில் அதிக நன்மைகள் கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்தில் கேது, சனிபகவான் சாதகமாக இருப்பதால் தொட்டதெல்லாம் பொன்னாகும். சனிபகவான் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடையச் செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார். ஆனால் அவர் டிச. 26க்கு பிறகு வீண்விரோதத்தை கொடுப்பார்.

கேது இறை அருளையும், பொருள் உதவியையும் தர காத்திருக்கிறார். உடல் உபாதைகளை குணமாக்குவார். ஆக.31க்கு பிறகு  அவரால் அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. அரசின் வகையில் பிரச்னையைச் சந்திக்கலாம். ராகு காரியத்தில் சிற்சில தடைகளை உருவாக்கலாம். ஆக.31க்கு பிறகு அவரால் உறவினர் வகையில் பிரச்னை உருவாகலாம். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். குருபகவான்  மன உளைச்சலையும்,  வீண் பகையையும் உருவாக்குவார்.  ஜூலை 7 முதல்  நவ. 13 வரை  குருவால் சுமாரான பலனே கிடைக்கும்.  எதிர்பார்த்த பதவி உயர்வு  கிடைக்காது. ஆனால் அவரது பார்வை பலத்தால் நன்மை காண்பீர்கள்.  செல்வாக்கு அதிகரிக்கும். ஆன்மிக ஆன்றோர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும். உறவினர் வகையில் வீண் விரோதம் உருவாக வாய்ப்புண்டு. எனவே சற்று  ஒதுங்கி இருக்கவும். ஜூலை 7 முதல்  நவ.13 வரை  குருவின் பார்வையால் குடும்பத்தில் குதுாகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு, மனை வாங்க யோகமுண்டு.

பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்களால் குடும்ப வாழ்வு சிறக்கும். சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து பொன், பொருள் வந்து சேரும். ஜூலை7 க்கு பிறகு தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். பூவியாபாரம் செய்யும் பெண்கள் கூடுதல் வருமானம் காண்பர். ஆக.31க்கு பிறகு குடும்பத்தில் பிரச்னை வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம் கவனம். அண்டை வீட்டார் வகையில் கருத்து வேறுபாடும் ஏற்படும். தாயை பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. ஆக.31க்கு பிறகு சிறுசிறு உபாதைகள் வரலாம்.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவர். விரயச் செலவு கு. சென்ற இடமெல்லாம் வெற்றி ஏற்படும். சேமிப்பு அதிகரிக்கும்.  புதிய தொழில் தொடங்க வாய்ப்புண்டு.  பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும்.
* வியாபாரிகள் நல்ல வருமானத்தை காண்பர். பெண்கள்  உறுதுணையாக இருப்பர். தானிய வியாபாரம் சிறப்பாக இருக்கும். அரசிடம் இருந்து உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் டிச. 26 க்குள் ஆரம்பிக்கலாம். இரும்பு, இயந்திரம், மற்றும் தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழில் சிறப்பாக இருக்கும்.
* தரகு, கமிஷன் தொழில் தொடர்ந்து அனுகூலத்தைக் கொடுக்கும்.
* தனியார் துறையினர் ஜூலை 7 முதல்  நவ.13வரை குவின் பார்வையால் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். வேலையில் ஆர்வம் பிறக்கும். வேலைப்பளு குறையும்.  விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்க பெறுவர். வேலை இன்றி இருப்பவர்கள் சற்று முயற்சி செய்தால் கூட வேலை கிடைக்கும்.
* ஐ.டி., துறையினர்  ஜூலை 7 முதல்  நவ.13 வரை தடைபட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர்.
* மருத்துவர்களுக்குத்  திறமை பளிச்சிடும். அதற்குரிய வருமானமும் கிடைக்கும்.
* வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கப் பெறுவர்.
* ஆசிரியர்களுக்கு ஜூலை 7 முதல்  நவ. 13 வரை மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் தங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பர். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை ஆக.31க்குள் கேட்டு பெறவும்.
* அரசியல்வாதிகள் சிறப்பான பலனைக் காண்பர். புகழ், பாராட்டு போன்றவை வரும். நல்ல பணப்புழக்கமும் இருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம்.
* விவசாயிகள் வளர்ச்சி காண்பர். நெல், கேழ்வரகு, சோளம்,எள் மற்றும் பனைப்பயிர்கள் நல்ல வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆக.1 வரை கால்நடை வளர்ப்பின் மூலமும் நல்ல வருமானம் கிடைக்கும்.
 * பள்ளி, கல்லுாரி மாணவர்கள் குருவின் பார்வையால் ஜூலை 7 முதல்  நவ.13 வரை நல்ல நிலையில் இருப்பர். வெற்றி கிடைக்கும். தேர்வில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு டிச.26க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும் வெளியூரில் அடிக்கடி தங்க நேரிடும். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்னைகளை சந்திக்கலாம். எனவே உங்கள் வரவு, செலவு கணக்குகளை சரியாக வைக்கவும்.
* வியாபாரிகள் டிச.26க்கு பிறகு பொருள் களவு ஏற்படவாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து அவர்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளவும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
* தனியார் துறையினர் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். மேலதிகரரிகளுடன் அனுசரித்து போகவும்.  முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு வேலை மீது வெறுப்பு வரலாம்.
* ஐ.டி. துறையினருக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை
* மருத்துவர்களுக்கு ஆக.31க்கு பிறகு பொருள் விரயம் அதிகம் ஏற்படலாம். எனவே யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
* வக்கீல்கள் டிச. 26க்கு பிறகு வழக்கு, விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம். புதிய வழக்குளில்  எட சற்று கவனம் தேவை.
* அரசியல்வாதிகள் ஆக. 31க்கு பிறகு மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வேலையில் இடமாற்றம் வர வாய்ப்புண்டு.
* பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் காணப்படுவர். புதிய பதவி கிடைப்பது அரிது. மனக்குழப்பம் ஏற்படலாம்.
* கலைஞர்கள் சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தங்கள் பெற வேண்டியதிருக்கும்.
* பள்ளி. கல்லுாரி மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது. முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது.

பரிகாரம்
* வெள்ளியன்று காளியம்மன் தரிசனம்
* வியாழனன்று குருபகவானுக்கு அர்ச்சனை
* பவுர்ணமியன்று அம்மனுக்கு மாவிளக்கு

 
                                  








Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us