மனைவியை பிரிந்தது ஏன் ? பிரிவுக்குப் பின் இணைந்த பிரியதர்ஷன் பதில்
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ் மற்றும் ஹிந்தியிலும் படங்களை இயக்கி வருகிறார். விரைவில் தனது நூறாவது படத்தை மோகன்லாலை வைத்து இயக்க உள்ளார். இவரது மனைவி முன்னாள் நடிகை லிசி. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். இந்த நிலையில் சமீப நாட்களாக இவர்கள் இருவரும் ஒன்றாகவே பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தனர். சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து வாழ்கிறார்கள் என்கிற தகவலை நடிகர் மம்முட்டி வெளிப்படுத்தியிருந்தார்.
மனைவியை பிரிந்தது, பின்னர் தற்போது மீண்டும் அவருடன் இணைந்தது ஏன் என்பது குறித்து இயக்குனர் பிரியதர்ஷன் சமீபத்தில் கூறும்போது, “கிட்டத்தட்ட 30 வருட திருமண வாழ்க்கையில் எங்கள் இருவருக்குமே போர் அடிப்பது போன்ற ஒரு உணர்வும் ஆளாளுக்கு கொஞ்சம் ஈகோவும் தலை தூக்கியது. அதனால் அவரவர் வழியில் செல்வதென முடிவெடுத்து பிரிந்தோம். ஆனால் சில வருடங்களுக்கு பிறகு நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் மிஸ் செய்வதை உணர்ந்தோம். அதன்பிறகு தான் மீண்டும் ஒன்றாக வாழ முடிவு செய்தோம். வாழ்க்கை முழுவதும் இப்படி ஒன்றாக பயணிப்போம். அதே சமயம் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை” என்று கூறியுள்ளார்.