பிளாஷ்பேக் : தொழில்நுட்ப ரீதியாக விமர்சிக்கப்பட்ட முதல் படம்
1960களுக்கு முன்பு வரை பெரும்பாலும் திரைப்படங்கள் தொழில்நுட்ப ரீதியாக விமர்சிக்கப்படுவதில்லை. கதை, நடிப்பு இசை, பாடல்கள்தான் அதிகம் விமர்சிக்கப்படும். முதன் முதலாக தொழில்நுட்ப ரீதியாக விமர்சிக்கப்பட்ட படம் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்'.
இந்தப் படம் 1844ம் ஆண்டு வெளியான 'தி கவுண்ட் ஆப் மான்டே கிறிஸ்டோ' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. 'சந்திரலேகா' வெளியாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு எஸ்.எஸ்.வாசன் தயாரித்து, இயக்கிய படம்.
'சந்திரலேகா' படத்திற்காக எடுக்கப்பட்டு அந்த படத்தில் பயன்படுத்தப்படாத காட்சிகள் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டது. அது முதல் விமர்சனத்திற்கு உள்ளானது. 'பிராசஸ் ஸ்கிரீன்' அல்லது 'பேக் புரொஜெக்ஷன்' அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதால் காட்சிகளில் செயற்கைத்தனம் இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. ஒரு காட்சியில் சரித்திர படமான இதில் மோட்டார் கார் கடந்து செல்வது காட்டப்பட்டது. சமீபத்தில் வெளிவந்த காந்தாரா படத்தின் காட்சியில் தண்ணீர்கேன் ஒன்று இடம்பெற்று கிண்டல் செய்யப்பட்டது போன்று இந்த காட்சி அப்போது கிண்டல் செய்யப்பட்டது.
என்றாலும், புயலில் சிக்கிய கப்பலைக் காட்டும் தொடக்கக் காட்சி, ஹிராலால் நடன அமைப்பு செய்த கண்ணும் கண்ணும் கலந்து பாடலில் வைஜெயந்திமாலா மற்றும் பத்மினியின் நடனக் காட்சிகள் பெரிதும் பாராட்டுகளை பெற்றது. படம் பெரிய வெற்றி பெற்று, பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தி ரீமேக்கில் தமிழில் நடித்த ஜெமினி கணேசன், வைஜெயந்திமாலா, பத்மினி, ஆகியோரே நடித்தனர். இந்த படத்தின் மூலம்தான் வைஜெயந்திமாலா பாலிவுட்டில் கால்பதித்தார்.