செல்வராகவனுடன் நடித்தபோது பயத்தில் நடுங்கினேன் : நடிகை ஹேமா
விஜய் நடித்த பைரவா படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ஹேமா. அதன்பிறகு பல படங்களில் நடித்த அவர், தற்போது இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் மனிதன் தெய்வமாகலாம் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ஹேமா கூறுகையில், ‛‛இதில் கதாநாயகியின் அண்ணி வேடத்தில் நடித்திருக்கிறேன். என்றாலும் படத்தில் பல முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளில் நான் இடம் பெறுகிறேன். குறிப்பாக செல்வராகவன், கவுசல்யா சம்பந்தப்பட்ட பாடலில் நானும் அவர்களுடன் இணைந்து நடனமாடுகிறேன். செல்வராகவனுடன் இணைந்து முதல் காட்சியில் நடித்தபோது பயத்தில் நடுங்கி விட்டேன். இதனால் மனப்பாடம் செய்த டயலாக் எல்லாம் மறந்துவிட்டது. அந்த காட்சியை இயக்குனர் ரீடேக் எடுத்துதான் படமாக்கினார்.
இப்படி நான் பயப்படுவதை பார்த்த இயக்குனர் செல்வராகவன் என்னிடத்தில் ரொம்ப கூலாக பேசினார். படத்தில் நடிக்கும்போது யாரையும் நினைத்து பதட்டப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எப்படி ஒரு கதாபாத்திரமோ அதே போன்று நானும் ஒரு கதாபாத்திரம். அதனால் என்னை ஒரு கதாபாத்திரமாக மட்டுமே நீங்கள் பார்க்க வேண்டும். பதட்டம் அடைய வேண்டிய தேவையில்லை என்று என்னிடத்தில் இயல்பாக பேசி எனது பயத்தை போக்கினார். இதன் பிறகு சமுத்திரக்கனி நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட்டாகி இருக்கிறேன். சினிமாவில் ரித்திகா சிங் பாணியில் ஆக் ஷன் கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்'' என்கிறார் ஹேமா.