உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க மறுத்து, பின் சிவாஜி நடித்து வெளிவந்த “ராணி லலிதாங்கி”

பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க மறுத்து, பின் சிவாஜி நடித்து வெளிவந்த “ராணி லலிதாங்கி”


1935ம் ஆண்டு, நடிகை டி பி ராஜலக்ஷ்மி, வி ஏ செல்லப்பா ஆகியோர் நடிக்க, மதுரை ராயல் டாக்கி விநியோகஸ்தர்களால், தயாரிக்கப்பட்ட திரைப்படம்தான் “லலிதாங்கி”. இந்த திரைப்படத்தை மீண்டும் தயாரிப்பாளர் கல்யாணராமன் தனது “டி என் ஆர் புரொடக்ஷன்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ் தயாரித்து, “ராணி லலிதாங்கி” என்ற பெயரில் வெளியிட்டிருந்தார். 1957ம் ஆண்டு இயக்குநர் டி ஆர் ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியிருந்த பாடலாசிரியர் தஞ்சை என் ராமையாதாஸ்தான் இதற்கான திரைக்கதை வசனத்தையும் அமைத்துத் தந்திருந்தார். ஆரம்பத்தில் இத்திரைப்படத்தின் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர் மக்கள் திலகம் எம் ஜி ஆர்.

படத்திற்கான வேலைகள் ஆரம்பமான நிலையில், தஞ்சை என் ராமையாதாஸிடம் அப்போது உதவியாளராக பணிபுரிந்து வந்த பிரபல திரைக்கதாசிரியர் ஆரூர்தாஸ், படத்தின் திரைக்கதை கோப்பை எடுத்துக் கொண்டு, எம் ஜி ஆரின் ஒப்புதலைப் பெறுவற்காக அவரை சந்திக்க சென்றிருக்கின்றார். திரைக்கதையை படித்துப் பார்த்த எம் ஜி ஆர், இதை எழுதியது யார்? என்று கேட்க, 'நாடகக் கதையையும், சில குறிப்புகளையும் வாத்தியார் (தஞ்சை என் ராமையாதாஸ்) என்னிடம் சொல்ல, அதை வைத்துக் கொண்டு நான்தான் எழுதினேன். வாத்தியாரும் படித்துப் பார்த்து, நல்லா இருக்கு என்று சொன்னதோடு, உங்களிடம் காட்டி வரச் சொன்னார்' என ஆரூர்தாஸ் கூறியுள்ளார்.

அதற்கு, 'கதை சம்பந்தப்பட்ட காட்சிகளில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தது. இப்போது அதை நீங்கள் விளக்கியிருக்கின்ற விதமும், இடை இடையே நீங்கள் எழுதியிருக்கின்ற நல்ல தமிழ் வசனமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்லியதோடு, சில குறிப்பிட்ட காட்சிகளை நான் மாற்றி இந்தத் தாளில் எழுதியிருக்கின்றேன். இதை நீங்கள் வாத்தியாரிடம் (தஞ்சை என் ராமையாதாஸ்) படித்துக் காண்பித்துவிட்டு, அந்தக் காட்சிகளோடு பொருந்தும்படியாக எழுதி இணைத்ததற்குப் பிறகு, மீண்டும் என்னிடம் வந்து நீங்கள் படித்துக் காட்ட வேண்டும். ஏனென்றால் நான் வாத்தியாருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். அதே சமயத்தில் என் கொள்கைக்கும் மாறாக இருந்துவிடக் கூடாது. நீங்கள் அழகான தமிழில் எழுதியிருக்கின்ற இந்தத் திரைக்கதையை நான் படித்துப் பார்த்ததில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கின்றது என எனக்குத் தோன்றுகிறது. வாழ்த்துகள்!' என அவரை வாழ்த்தி அனுப்பி வைத்திருக்கின்றார் எம் ஜி ஆர்.

எம் ஜி ஆரை வைத்து “ராணி லலிதாங்கி” திரைப்படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமாகி, வளர வளர, எம் ஜி ஆருக்கும், தஞ்சை என் ராமையாதாஸூக்கும் இடையே கருத்து வேறுபாடுகளும் வளர ஆரம்பித்துவிட்டது. இதன் விளைவாக 7000 அடி வரை வளர்ந்திருந்த “ராணி லலிதாங்கி”யின் படப்பிடிப்பும் நின்று போனது. அதன் பின்புதான் நடிகர் திலகம் சிவாஜிகணேசனை நாயகனாக ஒப்பந்தம் செய்து, படத்தை எடுத்து முடித்தனர் படக்குழுவினர். பி பானுமதி, பி எஸ் வீரப்பா, ராஜசுலோச்சனா, கே ஏ தங்கவேலு, எம் சரோஜா, கே சாரங்கபாணி, எஸ் டி சுப்புலக்ஷ்மி, செருகளத்தூர் சாமா, ஆர் பாலசுப்ரமணியம் போன்ற திறமை வாய்ந்த திரைக்கலைஞர்களின் நடிப்பு, படத்தின் கதை, பாடல்கள் என அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தும், 1957ல் வெளிவந்த இந்த “ராணி லலிதாங்கி” திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியையே சந்தித்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !