அக்ஷய் குமாரின் மகளிடம் நிர்வாண புகைப்படம் அனுப்பச் சொன்ன நபர் கைது
பாலிவுட்டில் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், கடந்த அக்டோபர் மாதம் மும்பையில் நடைபெற்ற சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அங்கே வருகை தந்த மகாராஷ்டிரா முதல்வர் மற்றும் காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முன்னிலையில் தனது மகளுக்கு நேர்ந்த சைபர் கிரைம் தாக்குதல் குறித்து அவர் வெளிப்படையாக பேசியது அனைவரையும் அதிர்ச்சி கொள்ளாக்கியது.
அந்த நிகழ்வில் அக்ஷய் குமார் பேசும்போது, “என்னுடைய மகள் ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு நபர் அவரை அடிக்கடி உற்சாகப்படுத்துவது போல பேசி அறிமுகமானார். ஒரு சில நாட்கள் கழித்து திடீரென என் மகளின் நிர்வாண படத்தை அனுப்பும்படி கூறினார். உடனடியாக என் மகள் சுதாரித்துக் கொண்டு மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு இந்த தகவலை தன் அம்மாவிடம் சென்று கூறினார். ஏழாவது முதல் பத்தாவது வரை படிக்கும் பெண் குழந்தைகளுக்கு இது குறித்து விழிப்புணர்வை வகுப்பறையில் ஆசிரியர்களும் வீட்டில் பெற்றோரும் ஏற்படுத்த வேண்டும். அப்படி என்றால் தான் பெரும்பாலான பெண் குழந்தைகள் இந்த சைபர் கிரைம் தாக்குதலுக்கு ஆளாகாமல் தப்பிப்பார்கள்” என்றும் ஒரு கோரிக்கை வைத்தார்.
இந்த தகவலை அக்ஷய் குமார் வெளிப்படுத்தி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்த நிலையில் இதுகுறித்து புகார் பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார் இதில் சம்பந்தப்பட்ட நபரை தற்போது கைது செய்துள்ளனர். இந்த தகவலை மகாராஷ்டிரா சைபர் கிரைம் கூடுதல் டிஜிபி யாஷவி யாதவ் உறுதிப்படுத்தியுள்ளார்.