‛கேஜிஎப்-3, சலார்-2' எப்போது? -பிரசாந்த் நீல் வெளியிட்ட தகவல்
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய பிரசாந்த் நீல் அதையடுத்து பிரபாஸ் நடிப்பில் ‛சலார்' என்ற படத்தை இயக்கியவர், தற்போது ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ‛டிராகன்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அந்த முன்னோட்டம் பத்து கோடி டிஜிட்டல் பார்வையாளர்களை நெருங்கி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது டிராகன் படத்திற்கான விளம்பர பணிகளை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛டிராகன் படத்தை முடித்த உடனே அடுத்து பிரபாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சலார்-2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார். அதையடுத்து கேஜிஎப்- 3 குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‛‛தற்போது நான் மட்டுமின்றி யஷும் பல படங்களில் கமிட்டாகி இருப்பதால், கேஜிஎப் -3 படத்தை தொடங்குவதற்கு அதிக கால அவகாசம் எடுக்கும். அது குறித்து நாங்கள் யோசிப்பதற்கே இன்னும் பல ஆண்டுகள் ஆகும்'' என்றும் தெரிவித்துள்ளார் பிரசாந்த் நீல்.