திருச்சி கிழக்கு வேட்பாளரா? ராஜ்யசபா எம்.பி.,யா?: நடிகர் சஞ்சீவ் பதில்
தமிழக முதல்வர் விஜயின் நண்பரும் ‛மெட்டிஒலி, திருமதி செல்வம்' போன்ற சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமானவருமான நடிகர் சஞ்சீவ் சென்னையில் அளித்த பேட்டியில், ‛‛எனக்கும் முதல்வர் விஜய்க்கும் 35 ஆண்டுகளாக நட்பு உள்ளது. கல்லூரியில் பல ஆசைகள், கனவுகள் பற்றி பேசி இருக்கிறோம். ஆனால் அதில் அவர் முதல்வர் கனவு பற்றி பேசியதில்லை. பல தடைகளை தாண்டி சினிமாவில் ஜெயித்தார். பெரிய இடத்துக்கு வந்தார். இப்போது முதல்வர் ஆகிவிட்டார். சினிமாவில் சந்தித்ததை விட அரசியலில் கொஞ்சம் நிறைய தடைகள். அந்த எதிர்ப்புகளை தடைகளை அவர் முறியடிப்பார். மக்கள் நினைப்பதை அவர் நிறைவேற்றுவார், ஏமாற்ற மாட்டார். என்னைப் பொறுத்தவரை இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாடு சிங்கப்பூராக மாறும். சிங்கப்பூரில் மருத்துவம், பாதுகாப்பு, கல்விக்கு முக்கியத்துவம் உள்ளது. அதேபோல் தமிழகமும் சந்தோஷமான நல்ல நிலைக்கு மாறும்'' என்றார்.
அவரிடம் ‛முதல்வர் அரசியல்வாதியாக இருக்கும்போது வேறு டிரஸ் கோட்டில் இருந்தார்; முதல்வரான பின் காஸ்டியூம்ஸ் ஸ்டைல் கோட்டுக்கு மாறியது ஏன்?' என்று கேட்க, ‛‛இந்தியாவில் எந்த முதல்வரும் கோட் அணிவதில்லை. இவர் எப்போதுமே ட்ரெண்ட் செட்டர். அதை உடையிலும் கடை பிடிக்கிறார்'' என்றார். மேலும் ‛திருச்சி கிழக்கு த வெ க வேட்பாளராக, த வெ க ராஜ்யசபா எம்பி ஆக போட்டியிடுவீர்களா?' என்ற கேள்விக்கு ‛‛அதெல்லாம் சூழ்நிலையை பொறுத்து இருக்கிறது. இப்போது அதை பற்றி யோசிக்கவில்லை. அனைத்தையும் காலம் தான் முடிவு செய்யும்'' என்றார்.