ஜப்பானில் அனிமே விருது விழா : ஹாலிவுட் நடிகருக்கு ராஷ்மிகா அளித்த பதில்
இந்தியத் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, ஜப்பானில் நடைபெற்ற அனிமே விருதுகள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவரும் 'பிளாக் பாந்தர்' நடிகரான வின்சன் டியூக் இணைந்து சிறந்த அனிமேஷன் விருதை வழங்கி இருக்கிறார்கள். 2024ல் கலந்து கொண்டதற்குப் பிறகு மீண்டும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார் ராஷ்மிகா.
2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இந்த அனிமே விருதுகள் வழங்கும் விழா. உலக அளவில் அனிமேஷன் வடிவில் உருவான திரைப்படங்கள், சீரிஸ்கள், கதாபாத்திரங்கள், இசை, பின்னணிக் குரல், இயக்குனர்கள் என 30க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டிற்கான விழா மே 23ம் தேதியன்று நடைபெற்றுள்ளது. இந்த விழா குறித்து வின்சன் டியூக், “இதுவே எனது முதல் ஜப்பான் பயணம்; எப்பேர்ப்பட்டதொரு அனுபவம் அது. இவ்வளவு செழுமையான கலாச்சாரத்தில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதும், அத்தனை அற்புதமான மனிதர்களைச் சந்தித்ததும் எனக்கு ஒரு கனவுலக அனுபவமாகவே தோன்றியது. ஈடுஇணையற்ற ராஷ்மிகாவுடன் இந்தத் தருணத்தைப் பகிர்ந்து கொண்டதும் இதில் அடங்கும்... நான் மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினேன்... அது ஒரு தூய மன அமைதி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு ராஷ்மிகா, “உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. டோக்கியோவில் உங்கள் பொழுதை மகிழ்ச்சியாகச் செலவிடுங்கள், நாம் மீண்டும் சந்திப்போம்” என்று கமெண்ட் செய்துள்ளார்.