'நீட்' வினாத்தாள் கசிவு குஜராத்தில் சி.பி.ஐ., ரெய்டு
'நீட்' வினாத்தாள் கசிவு குஜராத்தில் சி.பி.ஐ., ரெய்டு
'நீட்' வினாத்தாள் கசிவு குஜராத்தில் சி.பி.ஐ., ரெய்டு
ADDED : ஜூன் 30, 2024 12:01 AM
புதுடில்லி: 'நீட்' வினாத்தாள் கசிவு வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., நேற்று குஜராத்தில் ஏழு இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
இளநிலை மருத்துவல படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
இந்தாண்டுக்கான தேர்வு மே 5ல் நாடு முழுதும் உள்ள 4,750 மையங்களில் நடந்தது. 23 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இந்த தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து மத்திய கல்வி அமைச்சகம் இந்த வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைத்தது. கடந்த 23ம் தேதி சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியது.
பீஹார், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தனித்தனியே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு தொடர்பாக நேற்று முன்தினம் ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியரை சி.பி.ஐ., கைது செய்தது.
இவர்கள், தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு நடந்த தனியார் பள்ளியின் கண்காணிப்பாளர்களாக செயல்பட்டவர்கள்.
அவர்களுக்கு உதவியதாக ஹிந்தி பத்திரிகை நிருபர் ஜமாலுதின் அன்சாரி என்பவரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று காலை குஜராத்தின் ஆமதாபாத், ஆனந்த், கேடா மற்றும் கோத்ரா ஆகிய நான்கு மாவட்டங்களில், வினாத்தாள் கசிவு வழக்கில் சந்தேகத்திற்குரிய நபர்களின் இடங்களில் சோதனை நடத்தினர்.