ADDED : செப் 24, 2025 11:56 PM
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம், ராமநாதபுரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது.
ஆக.,5ல் ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் அருகே தொண்டி, திருப்பாலைக்குடியை சேர்ந்த மீனவர்கள் விமல்ராஜ் 24, மாதேஷ் 20, சக்தி 18, கார்த்தி 18, ஆகியோர் பைபர் கிளாஸ் படகில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் வலையை கடலில் வீசிவிட்டு காத்திருந்த போது இன்ஜின் பழுதாகி படகு கச்சத்தீவில் ஒதுங்கியது.இவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த ஊர்காவல்துறை நீதிபதி நளினி சுபாஸ்கரன் படகில் வலை இல்லாமலும், இன்ஜின் பழுதாகியது தெரிய வருவதால் மீனவர்களை நிபந்தனையின்றி படகுடன் விடுதலை செய்தார்.
ஆக., 13ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை நேற்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். மீனவர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தண்டனையை 6 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து விடுதலை செய்வதாகவும், 6 ஆண்டுக்குள் மீண்டும் கைதானால் இத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
விடுவிக்கப்பட்ட 11 மீனவர்களையும் கொழும்பு அருகே முகாமில் போலீசார் தங்க வைத்தனர். சில நாட்களுக்கு பின் விமானம் மூலம் சென்னை வர உள்ளனர்.