சென்னை - புதுச்சேரி - கடலுார் ரயில் பாதைக்கு கூடுதல் நிதி?
சென்னை - புதுச்சேரி - கடலுார் ரயில் பாதைக்கு கூடுதல் நிதி?
சென்னை - புதுச்சேரி - கடலுார் ரயில் பாதைக்கு கூடுதல் நிதி?
ADDED : ஜூன் 26, 2024 04:07 AM

சென்னை : சென்னை - மகாபலிபுரம் - புதுச்சேரி - கடலுார் புதிய ரயில் பாதை திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்காததால், இந்த திட்டம் பல ஆண்டுகளாக முடங்கி உள்ளது.
சென்னையில் இருந்து கடலோரம் வழியாக ரயில் பாதை அமைத்தால், போக்குவரத்து நெரிசல் குறையும். அந்த வகையில், சென்னை - மகாபலிபுரம் - புதுச்சேரி - கடலுார் வழித்தடத்தில், 179 கி.மீ., துாரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க, 2007ல் ரயில்வே ஒப்புதல் அளித்தது.
இதற்கான ஆரம்ப கட்ட சர்வே பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்ததால், திட்ட மதிப்பீடு, 1,500 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த மத்திய பட்ஜெட்டிலும், 50 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால், பெரிய அளவில் பணிகள் நடக்கவில்லை.
இது குறித்து, ரயில் பயணியர் கூறியதாவது:
சென்னை - கன்னியாகுமரி ரயில்வே வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், பயணியரின் ரயில் தேவை பல மடங்கு உள்ளது. எனவே, சென்னையில் இருந்து புதுச்சேரி - கடலுார் வழியாக புது ரயில் பாதை திட்டத்தைச் செயல்படுத்த ரயில்வே அறிவித்து பல ஆண்டுகள் ஆகியும், பெரிய அளவில் பணிகள் நடக்கவில்லை.
தமிழகம், புதுச்சேரிக்கு முக்கிய ரயில் பாதை திட்டமாக இது உள்ளது. எனவே, வரும் மத்திய பட்ஜெட்டில், இந்த திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, விரைவாகச் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை - மகாபலிபுரம் - புதுச்சேரி - கடலுார் ரயில் திட்டத்திற்கு அதிக அளவில் நிதி தேவை. மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கும் நிதியை கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வரும் பட்ஜெட்டில், இந்த திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி வலியுறுத்தி உள்ளோம்.
இது, முக்கியமான ரயில் பாதை திட்டம் என்பதால், மற்ற மாநில அரசுகள் ரயில்வேயுடன் இணைந்து பணியாற்றுவது போல, தமிழகம், புதுச்சேரியும் தங்களது பங்களிப்பையும் அளிக்க முன்வந்தால், இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த முடியும். பயணியர் ரயில்கள் மட்டுமின்றி, சரக்கு ரயில்களையும் இயக்கி தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.