Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ நகராட்சிகள், மாநகராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைக்க கமிட்டி

நகராட்சிகள், மாநகராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைக்க கமிட்டி

நகராட்சிகள், மாநகராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைக்க கமிட்டி

நகராட்சிகள், மாநகராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைக்க கமிட்டி

ADDED : ஜூன் 23, 2024 06:36 AM


Google News
சென்னை : ''உள்ளாட்சிகளை தரம் உயர்த்த, பிரிக்க, அருகில் உள்ள உள்ளாட்சிகளுடன் இணைக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது,'' என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

காங்கிரஸ் - பிரின்ஸ்: ஊராட்சிகளை, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைக்க விரும்புகிறீர்கள். அவ்வாறு இணைக்கக் கூடாது. மத்திய அரசின், 42 சிறப்பான திட்டங்கள், பஞ்சாயத்துராஜ் வழியே வழங்கப்படுகின்றன.

அதை கிராம ஊராட்சிகள் செயல்படுத்த வேண்டும். நகர்பாலியா, ஊராட்சி என, இரண்டு அடுக்குதான் இருக்க வேண்டும். இது மக்களுக்கு எளிதாக பணிகளை செய்ய உதவும். கன்னியாகுமரி மாவட்டத்தில், 25 கிராம ஊராட்சிகளை, பேரூராட்சியுடன் இணைத்து மிகப்பெரிய தவறை செய்யக் கூடாது.

அமைச்சர் நேரு: உள்ளாட்சிகளை இணைக்க, ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில், மூத்த அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். எதோடு எதை இணைக்க வேண்டும் என, முடிவு செய்வர். இணைக்கக் கூடாது என்று, நீங்கள் உங்கள் சவுகரியத்திற்கு கூறக்கூடாது.

மக்கள் சவுகரியப்படிதான் செய்ய முடியும். சில பகுதிகளில், ஒரே நபர் தலைவராக வர வேண்டும் என்பதற்காக இணைக்கக் கூடாது என்கின்றனர். ஊராட்சிகளை இரண்டாக பிரிக்க உள்ளனர். ஒன்றியங்களை அதிகப்படுத்த உள்ளனர். ஒன்றியக் கவுன்சிலர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட உள்ளது. கமிட்டி தான் முடிவு செய்யும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

அமைச்சர் நேரு தன் பதிலுரையில் கூறியதாவது:

பூந்தமல்லி, திருவேற்காடு, திருநின்றவூர், மதுக்கரை நகராட்சிகளை, அருகில் உள்ள மாநகராட்சிகளுடன் இணைக்கவும், ஸ்ரீபெரும்புதுார், மாமல்லபுரம், அவினாசி, பெருந்துறை, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 13 பேரூராட்சிகளை, 11 நகராட்சிகளாக தரம் உயர்த்தவும், எட்டு ஊராட்சிகளை இணைத்து, ஒரு நகராட்சி உருவாக்கவும் உத்தேசிக்கப்பட்டு உள்ளது. நகராட்சிகள் எண்ணிக்கை, 149 ஆகவும், பேரூராட்சிகள் எண்ணிக்கை, 490ல் இருந்து 700 ஆகவும் அதிகரிக்க உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us