போலீசாரிடமே கைவரிசை காட்டும் 'சைபர்' குற்றவாளிகள்
போலீசாரிடமே கைவரிசை காட்டும் 'சைபர்' குற்றவாளிகள்
போலீசாரிடமே கைவரிசை காட்டும் 'சைபர்' குற்றவாளிகள்
ADDED : ஜூன் 26, 2024 03:57 AM

சென்னை : 'சைபர்' குற்றவாளிகள், போலீசாரின், 'வாட்ஸாப்' குழுக்களுக்கு, 'லிங்க்' அனுப்பி, அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக காவல் துறையில், கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., நிலையில் உள்ளவர்களுக்கு, எஸ்.பி.ஐ., வங்கியில் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தான் சம்பளமும் பெற்று வருகின்றனர். இரு தினங்களாக, போலீசாரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு, 'சைபர்' குற்றவாளிகள் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
எங்கள் மொபைல் போனுக்கு, 'ரிவார்டு' தொகை அனுப்பப்பட்டு உள்ளதாக சொல்லி, அதை பெற, 'லிங்க்' ஒன்றையும் அனுப்புகின்றனர். அதை, 'கிளிக்' செய்தால் செயலி ஒன்று பதிவிறக்கம் ஆகிறது. அப்போது, எங்கள் மொபைல் போனை, 'சைபர்' குற்றவாளிகள் முடக்கம் செய்து, அதில் உள்ள தொடர்பு எண்கள் உள்ளிட்ட விபரங்களை திருடி விடுகின்றனர்.
எங்களுடன் தேர்வு எழுதியவர்கள், பயிற்சி எடுத்தவர்கள், ஒரே நேரத்தில் பணியில் சேர்ந்தவர்கள் எல்லாரையும் ஒருங்கிணைத்து, வெவ்வேறு, 'வாட்ஸாப்' குழுக்களை துவங்கி உள்ளோம். 'சைபர்' குற்றவாளிகள், நாங்கள் அனுப்பியது போல, எங்களுக்கான, 'வாட்ஸாப்' குழுக்களில் லிங்க் அனுப்பி, பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், சென்னையில் பணிபுரியும் நான்கு போலீசாரிடம் இருந்து, 20,000 ரூபாய்க்கு மேல் பறித்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.