Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

மிதுனம்கண்ணியமுடன் நடந்து கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே!

குரு பகவான் உங்கள் ராசிக்கு 2ல் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். உங்களை எதிர்த்தவர்கள் உங்களை சரண் அடையும் நிலை ஏற்பட்டிருக்கும். பகைவர்களின் சதி தவிடு பொடியாகி இருக்கும். மனதில் துணிச்சல் பிறந்து சாதனை படைத்திருப்பீர்கள். பொருளாதார வளம் சேமிக்கும் விதத்தில் கைகொடுத்திருக்கும். தொழில், வியாபாரத்தில் முதலிடம் வகித்திருப்பீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் மன நிம்மதியோடு பணியாற்றி இருப்பீர்கள். சிலர் புதிய பதவி பெற்று இருப்பர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடி இருக்கும். வீடு, மனை வாங்கி இருக்கலாம். இப்போது குருபகவான் 3-ம் இடமான சிம்மத்துக்கு வருகிறார். இதனால், முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது.

அப்படியானால் குருவால் பிற்போக்கான பலன்கள் தான் நடக்குமோ என்று அஞ்ச வேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. குரு பார்வையால் கோடி நன்மை உண்டாகும். எந்த இடையூறையும் அவரின் பார்வை பலத்தால் தகர்த்தெறிவீர்கள். மொத்தத்தில் சிம்மகுரு நன்மை  தர காத்திருக்கிறார். அதோடு மற்ற கிரகங்களின் நிலையையும் கொண்டு பலனை கணக்கிட வேண்டும். டிச.20ல் குரு, கன்னிராசிக்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அங்கு அவர் உறவினர்கள் வகையில் பிரச்னை, வீண்விரோதம் ஏற்படலாம். சனிபகவான் ஜூன் 12ல் வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார்.

5-ம் இடத்தில் சனிபகவான் இருக்கும் போது, பல்வேறு இடையூறுகளைத் தரலாம். மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை உருவாகும். ஆனால் வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தர மாட்டார். 2015 செப். 5ல் வக்ர நிவர்த்தி அடைந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். சனி பகவான் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அப்போது வழங்குவார்.  மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம். பொருளாதார வளம் சிறக்கும். செலவுகள் அதிகரித்தாலும், அதை ஈடுகட்டும் வகையில் வருமானமும் புதிய வழிகளில் வந்து சேரும். உறவினர் மத்தியில் மரியாதை சுமாராக இருக்கும். வீண் விரோதத்தைத் தவிர்க்கவும்.

தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உழைப்புக்கு தகுந்த லாபம் இருக்கும். புதிய தொழில் முயற்சி ஓரளவு கை கொடுக்கும். பகைவர்களின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கினாலும், எளிதில் முறியடிப்பீர்கள். தொழில் விஷயமாக வீண் விரோதம் வர வாய்ப்புண்டு. அரசிடம் இருந்து எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் உருவாகும். வீட்டுக்கு தேவையான வசதி அனைத்தும் கிடைக்கும். கணவன், மனைவி இடையே அவ்வப்போது கருத்துவேறுபாடு வர வாய்ப்புண்டு. அனுசரித்து போவது
நல்லது. பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

பணியாளர்கள் சீரான நிலையில் இருப்பர். பணிச்சுமை, அலைச்சல் ஏற்படலாம். தீவிர முயற்சி இருந்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும்.

கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பாராட்டை விட பொருளாதார வளத்தில் மேம்பாடு காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த புதிய பதவி கிடைக்கும். வெளிநாடு சென்று வருவீர்கள். எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள்.

மாணவர்கள் சீரான நிலையில் இருப்பர். அக்கறையுடன் படிப்பது அவசியம். குருவின் பார்வை சிறப்பாக அமைந்திருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.

விவசாயிகள் நல்ல மகசூலைக் காண்பர். குறிப்பாக நெல், சோளம், கேழ்வரகு போன்ற பயிர் வகைகள் மூலம் அதிக வருவாய் காணலாம். சிலர் புதிதாகச் சொத்து வாங்குவர்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வர். மனம் போல புத்தாடை, அணிகலன்கள் வாங்கி குவிப்பர். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

பரிகாரம்: நவக்கிரக வழிபாடு நன்மையளிக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு
விளக்கேற்றுங்கள். ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்யுங்கள். ராகு
காலத்தில் காளிக்கு தீபமிடுங்கள். முருகன் கோவிலில் தரிசனம் செய்து வாருங்கள்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us