Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

மிதுனம்மிருகசீரிடம், 3,4 ம் பாதம்: இனிமையான அனுபவங்களைப் பெறுவீர்கள்

பொதுவாக வெளிநாட்டு தொடர்புடைய நன்மைகள் மற்றும் ஆதாயம் தரும். உங்கள் ஜென்ம ராசியை குரு பார்ப்பதால் உங்கள் புகழ், அந்தஸ்து, கௌரவம். மதிப்பு, மரியாதை, உற்றார், உறவினர், நண்பர்கள் மத்தியில் உயரும். வீட்டிலும் வெளியிலும் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களின் எதிரிகளை நேர்மையான முறையில் எளிதில் வெல்வீர்கள்‘. உங்களின் எதிர்கால முன்னேற்றத்தைக் கொடுக்கக்கூடிய சில நிகழ்வுகள் நடக்கும். அரசு சார்ந்த உங்களின் வேலை சிறப்பாக நிறைவேறி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது.

நிதி:
ஆரம்பத்தில், பொருளாதார விஷயங்களில் பலவீனம் இருக்கும். இருப்பினும், உங்கள் நிதி வாழ்க்கையை மேம்படுத்த உங்கள் கடின உழைப்பையும் முன்னேற்றத்தையும் பயன்படுத்தி வெல்வீர்கள்.. பொருளாதார வகையில் பார்க்கும் பொழுது, இந்த ஆண்டு உங்களுக்கு கலவையான பலன் கொண்டு வரக்கூடும். எனினும் அதிகமான நற்பலன்களே இருக்கும். உழைத்த உழைப்பு உங்களை ஏமாற்றாமல் பலன் கொடுக்கும்.

குடும்பம்:
பல மாதங்கள் கழித்து வரன் பொருந்தி வரும். பெற்றோர்களின் மணிவிழா, முத்துவிழா, பவளவிழா போன்றவற்றையும், பிள்ளைகளின் பிறந்தநாள் விழாக்களையும் நடத்தும் யோகம் உண்டு. உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் இருக்கும், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் விரும்பியது போல சந்தோஷமாக நேரத்தை செலவிடுவீர்கள்.

கல்வி:
போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நிபுணர்களிடம் நல்ல ஆலோசனை கிடைக்கும், போட்டி தேர்வில் வெல்ல வாய்ப்புள்ளது. ஆண்டின் முதல் பாதியில் சற்று அலட்சியப்போக்கு இருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். பிற்பாதியில் திடீர் முனைப்பு வந்து எதிர்பார்த்ததைவிட அதிக மதிப்பெண்ணுடன் வெற்றியடைவீர்கள்.

பெண்கள்:
காதலில் இனிமையான அனுபவங்களைப் பெற முடியும். திருமணத்திற்கு உறவினர்களிடம் பேசுவதற்கு சரியான தருணத்தைத் தெரிவு செய்வது அவசியம். திருமணத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். திருமணமான பெண்கள் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டு புகுந்த வீட்டில் இதுவரை அடைந்த மனக் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து இந்த ஆண்டு ஆறுதலை தரும்.

உடல் நிலை:
மாற்று வகை மருத்துவம் மேற்கொண்டு பல காலமாய்த் தொல்லை கொடுத்து வந்த நோய்கள் அகலும்.  உடல் நிலை பற்றி மனதில் ஏற்பட்டிருந்த கவலை  மறையும். சருமம் சம்பந்தமாய் நோய்களிலிருந்து முற்றிலும் விடுபடுவீர்கள். உணவுப் பழக்கம் காரணமாக சிறு தொல்லைகள் ஏற்பட்டு சில நாட்களிலேயே சரியாகும். நிரந்தரப் பிரச்னை என்று எதுவும் இருக்காது.

தொழில்/பணி:
வாடிக்கையாளர்களை சலுகை திட்டங்களை அறிவித்துக் கவர்வீர்கள். அனுபவமிகுந்த வேலையாள்களைச் சேர்ப்பீர்கள். பணியிடத்தில் புது நண்பர் யாருக்கும் கடன் தரவேண்டாம். புரோக்கரேஜ், ஏஜென்ஸி வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படிப் பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விடாமல் அழகாகச சமாளிப்பீர்கள். என்றாலும் லாபம் உண்டு. உணவு, இரும்பு, கட்டட பொருள்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள்

பரிகாரம்:
நாராயணனைத் துதித்தால் நன்மை அடையலாம்.
பாடல்:
உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே

திருவாதிரை : முன்னேற வாய்ப்புகள் உண்டாகும்

எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் குருவும் சனியும் சஞ்சரிக்கின்றனர். 12ஆம் வீட்டில் ராகுவும், ஆறாம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். பழைய தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள்.  கணவன் மனைவி இடையே இருந்து வந்த சின்னச் சின்ன பிரச்சினைகள் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் சரியாகும். எந்த முடிவு எடுக்கும் முன்பாகவும் நன்கு ஆலோசிப்பதுடன் அனுபவசாலிகளைக் கலந்தாலோசியுங்கள். வேலையில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

நிதி:
பணவரவு ஓரளவுக்குத் திருப்திகரமாக இருக்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி, முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். அதிகம் உழைத்து நற்பலனை அடைய முடியும். பல துறையில் உங்களின் தேடல் அதிகரிக்கும். உங்களின் திறமை அதிகரிக்கும், உங்களின் செயல்பாடு சிறப்பாகவும், பொறுமையுடனும் செயல்பட்டு செயல்களில் வெற்றி பெறுவீர்கள். அதன் மூலம் நல்ல லாப நிலை உண்டாகும்.

குடும்பம்:
திருமண வயதில் உள்ள இந்த ராசியினருக்கு, அவர்கள் எதிர்பார்த்த மாதிரியான வரன் அமையும். தம்பதியிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். ஆரோக்கியமான விவாதம் ஏற்படலாம். பிள்ளைகளுடன் நல்ல புரிதல் ஏற்படும். அவர்கள் உங்களின் பேச்சை கேட்டு நடக்கும் வகையில் நீங்களும் அவர்களுடன் நல்லபடி நடந்து கொள்வீர்கள்.  கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும்.
 
கல்வி:
மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் படிப்பீர்கள். விளையாட்டு போட்டிகளில் பரிசு, பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ளது. சிலருக்கு மேற்கல்வி தொடர்பான வெளிநாடு, வெளியூர் பயணம் அமையும். நீர் சார்ந்த விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள். ஈடுபாடு காரணமாக முன்பைவிட இப்போது அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கல்விஸ்தானத்தை குரு பார்ப்பதால் எங்கும் எதிலும் வெற்றி உண்டு.

பெண்கள்:
எதையும் அவசரப்படாமல் செய்தால் எந்தப் பிரச்னையும் வராது. ரகசியங்களைப் பாதுகாக்க வேண்டும். புதியவர்களை நம்ப வேண்டாம். அலுவலகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.  அதிக அலைச்சல் இருக்கும். பணியையும் குடும்பத்தையும் சீர் செய்து பொழுது போக்கு விஷயங்களிலும் சந்தோஷமாக அனுபவிப்பீர்கள்.

உடல் நிலை:
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருப்பது அவசியம். சளி தொடர்பான பிரச்னை வரக்கூடும். இயற்கை உணவை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் நலம் முன்னேற்றம் தருவதாக இருக்கும் வயிறு மற்றும் ஜீரணம் சம்பந்தமான தொல்லைகள் இல்லாதபடி கவனமான முறையில் உணவு உட்கொணடால் பிரச்னை ஏதும் வராது.

 தொழில்/பணி:
அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் இருக்கும் மனத்தாங்கல்களை உங்கள் குணத்தால் மெல்ல மாற்றுவீர்கள். இரவு பகலாக உழைத்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்தும் நிலை ஏற்பட்டிருந்த நிலையில் உங்கள் வருத்தம் தீரும். விருப்பமில்லாத இடமாற்றம் இருந்தாலும் அதைக் காலப்போக்கில் விரும்ப ஆரம்பிப்பீர்கள். மேலதிகாரியுடன் அவ்வப்போது மனஸ்தாபங்கள் இருந்தாலும் அனுசரித்துப் போய் விஷயத்தைச் சாதித்துக்கொள்வீர்கள்.

பரிகாரம்:
முருகர் வழிபாடு தொல்லை நீக்கும்
பாடல்:
‘உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

புனர்பூசம்: 1,2,3 ம் பாதம்: மன நிம்மதி அதிகரிக்கும்.

பொதுவாக நிதி நிலைமையை உயரும். உங்களின் ஆளுமை கூடும். அரசு வகையிலான அனுகூலங்கள் சிறப்பாக நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் மதிப்பும், கௌரவமும் அதிகரிக்கும். உங்கள் செல்வத்தின் தேடலுக்கான முயற்சியில் விரும்பியது போலவே நிலைமை சாதகமாக அமையும். கடந்த ஆண்டுகளைவிட மன நிம்மதி அதிகரிக்கும். வெற்றி வாய்ப்பு கூடும். சற்று கவனமாக இருக்க வேண்டிய ஆண்டு. இருப்பினும் உங்களுக்கு பலவித அதிர்ஷ்டங்கள் அடிக்க வாய்ப்புள்ளதால் பிரச்னைகளை சாதகமாக வாய்ப்புக்கள் பிறக்கும். இந்த புத்தாண்டு சாதகமான ஆண்டாக அமையும். பல வகைகளில் நல்ல வசதி  வாய்ப்புகள் தேடி வரும். பெரிய மனிதர்கள் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். அக்கம் பக்கத்தினர், தோழிகளிடம் அளவோடு பழகுவது நல்லது.

நிதி:
திடீர் செலவுகளும் ஏற்படும். அதே நேரம் பண வரவும் அதிகரிக்கும். தன வரவு அதிகரிப்பதால், பற்றாக்குறை நீங்கும். கடன் சுமை நீங்கும். உடல் நலம் மேம்படும் என்பதால் மருத்துவ செலவும் குறைந்து உழைக்கும் நேரமும் கூடி, வருமானம் அதிகரித்து, சேமிப்பு அதிகரிக்கும். பெரிய சொத்துக்கள் வாங்கத் திட்டமிடுவதால் வேறு வழியின்றி லோன் போட வேண்டியிருக்கும். அதைச் சரியாக அடைப்பது பற்றி முறையாகத் திட்டமிடுவீர்கள். குடும்பத்தினர் கைகொடுப்பார்கள் என்பதால், அதற்கு வேண்டிய ஒத்துழைப்புக்கள் கிடைக்கும். உபரி வருமானங்கள் உங்கள் எண்ணம்போல் வரும். சொத்துவாங்குவதற்குச் சேமிப்பிலிருந்து எடுப்பீர்கள். இது நியாயமான செலவே.

குடும்பம்: குடும்பத்தில் அமைதியும், கருத்து வேறுபாடு கலந்து இருந்தாலும், கூடுதலாக மகிழ்ச்சி தவழும். கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ, உங்கள் குழந்தைகளுக்கோ திருமண முயற்சியில் தடைகளும், தாமதங்களும், தடுமாற்றங்களும் ஏற்பட்டிருந்தால் அது இனிமாறும். குடும்பத்திலிருந்து பிரிந்து போனவர்கள் மீண்டும் வந்து இணைய வாய்ப்பு உள்ளது. அல்லது குறைந்தது அவர்கள் அதற்கு வருந்தி உங்களுடன் நல்லுறவு கொண்டாடுவார்கள். குழந்தைகள் பெற்றோரின் அன்பைப் புரிந்த கொள்வார்கள்.
                         
கல்வி: மிக நல்ல பலன்களை பெறப்போகும் நிலை உள்ளது. பல திடீர் திருப்பங்கள் உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். கடந்த ஆண்டு வரை எவ்வளவு முயற்சித்தாலும்  நல்ல மதிப்பெண் எடுக்க முடியாத குறை மனதை வாட்டியிருக்கும். இப்போது உங்கள் உழைப்புக்கு நல்ல பலன் உண்டு. உங்களைப் புரிந்த கொள்ளாத ஆசிரியர்கள் இப்போது உங்களைக் கருணையுடன் பார்ப்பதோடு உதவிகரமாகவும் முன்வருவார். அவரது அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். இதனால் இத்தனை காலம் காணாமல் போயிருந்த தன்னம்பிக்கை மீளும்.

பெண்கள்:
வீண் பேச்சைத் தவிர்த்து வம்புக்காரர்களிடமிருந்து விலகும் அளவு வாழ்க்கையைக் கற்பீர்கள்.  கோபத்தை கைவிடப்போகிறீர்கள். நன்மைகள் கூடுதலாகும். விட்டுப்போன உறவுகள் கைகூடும். இதனால் பலகால ஏக்கம் தீரும். உங்கள் துணை உங்களைப் புரிந்து கொண்டு, உங்களுக்கு ஆறுதலைத் தருபவராக இருப்பார்.

உடல் நிலை:
குரு பார்வை காரணமாக உடல்நிலை நல்லபடியாக தான் இருக்கும். சனியின் பார்வை ஓரிரு சிரமங்கள் ஏற்படுத்தினாலும் உடனுக்குடன் சரியாகும். கடந்த ஆண்டு இருந்த அளவு உடல் நிலையில் அல்லது மன நிலையில் சிரமங்கள் இருக்காது. அவசரம் படபடப்பு இவை கூடாது. பரபரப்பு காரணமாகக் காயங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்.

தொழில்/பணி: தொழில், வியாபாரத்தில் சற்று அலைச்சல் காணப்பட்டாலும், வெற்றியை நிச்சயம் பெறுவீர்கள். உங்களை தேடி வரும் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்த மிக உன்னதமான நிலையை அடைவீர்கள். பணியாளர்களுக்குப் பணிச்சுமை இருந்தாலும், சரியான நேரத்தில் முடித்து மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவீர்கள். சம்பளம், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் நல்ல பெயர் எடுக்க ஆரம்பத்தில் செய்யும் முயற்சிகள் பலிக்காமல் சோர்வு ஏற்படும்போது ஒ‘ரு அதிகாரி உங்களைப் புரிந்து கொள்வதால் மற்றவர்களுக்கும் புரியும்.

பரிகாரம்:
பராசக்தியைத் துதித்து நன்மை அடையுங்கள்.
பாடல்:
மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே
ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us