மம்முட்டியின் உதவியால் கேட்கும் திறனை பெற்ற இரண்டு சிறுவர்கள்
நடிகர் மம்முட்டி தான் நடத்தி வரும் மருத்துவமனை மற்றும் அறக்கட்டளைகள் மூலமாக பலருக்கும் மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் இடுக்கியை சேர்ந்த செவித்திறன் இழந்த இரண்டு சிறுவர்கள் தற்போது மம்முட்டியின் உதவியால் கேட்கும் திறனை பெற்றுள்ளனர். இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த மைக்கேல், மிகோக் என்கிற இரண்டு சகோதரர்கள் பிறவியிலேயே செவித்திறன் குறைபாட்டுடன் பிறந்தவர்கள். ஒரு கட்டத்தில் இவர்களது குறைபாடு தெரியவர, சிகிச்சைக்கு மிகப்பெரிய அளவில் பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் தெருவில் பாட்டுப்பாடி அதன் மூலம் சிகிச்சைக்காக பணம் சேர்க்க துவங்கியுள்ளனர்.
இந்த தகவல் மம்முட்டி நடத்தி வரும் 'கேர் அண்ட் ஷேர் இன்டர்நேஷனல் பவுண்டேஷனுக்கு தெரிய வந்ததும், ஆலுவா ராஜகிரி மருத்துவமனை மூலமாக இந்த குழந்தைகளுக்கு இலவசமாக கோக்லியர் இம்ப்லான்ட் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த குழந்தைகள் இருவரும் தற்போது ஒலிகளை முதன்முறையாக கேட்கத் துவங்கியுள்ளனர்.
மம்முட்டி எங்கள் பிள்ளைகளுக்கு புதிய வாழ்க்கையை தந்துள்ளார்; எங்களை பொறுத்தவரை அவர்கள் இப்போது மம்முட்டியின் தத்து பிள்ளைகள் என்று குழந்தைகளின் பெற்றோர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.