உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : இசையால் தாலாட்டிய 'பாகப்பிரிவினை'

பிளாஷ்பேக் : இசையால் தாலாட்டிய 'பாகப்பிரிவினை'

சிவாஜி, இயக்குநர் ஏ.பீம்சிங் இணைந்து பணியாற்றிய 'பா' வரிசைப் படங்களான 'பாசமலர்', 'பாலும் பழமும்', 'பார்த்தால் பசி தீரும்' என்ன எல்லாமே வெற்றி படங்கள், அதில் முக்கியமானது 'பாகப்பிரிவினை'. இந்த படம் பல தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடியது. இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் சிவாஜியின் நடிப்பும், வலுவான கதை அமைப்பும் என்று இன்றைக்கும் கூறுவார்கள். ஆனால் இன்னொரு முக்கியமான காரணம் படத்தின் இசை மற்றும் பாடல்கள்.

இந்தப் படத்துக்கு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்தார்கள். அற்புதமான இசையையும் பாடல்களையும் வழங்கியிருந்தார்கள். பட்டுகோட்டை கல்யாணசுந்தரமும் மருதகாசியும் பாடல்களை எழுதியிருந்தார்கள். அந்த சமயத்தில் சிவாஜிக்கும், கண்ணதாசனுக்கும் மனஸ்தாபம் இருந்தது. இதனால் சிவாஜி படங்களுக்கு பாடல்கள் எழுதுவதில்லை என்ற முடிவில் இருந்தார் கண்ணதாசன்.

இந்த நிலையில் தான் படத்திற்கு பாடல்களை எழுதிய பட்டுகோட்டை கல்யாண சுந்தரத்திடம் இந்த பாடலையும் நீங்களே எழுத வேண்டும் என்று ஒரு பாடலைச் சொன்னார்கள். ஆனால் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம், இயக்குநர் பீம்சிங்கிடம், 'கதையில் இந்த இடத்தில் வருகிற கண்ணதாசனை தவிர யாருமே எழுதமுடியாது' என்று அந்தப் பாடலை எழுத மறுத்து விட்டார்.

ஒரு வழியாக கண்ணதாசனை சமாதானப்படுத்தி அந்த பாடலை எழுத வைத்தார்கள் அந்த பாட்டு தான் 'ஏன் பிறந்தாய் மகனே...' பாட்டு.

இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டு. 'பிள்ளையாரு கோயிலுக்கு', 'தேரோடும் எங்க சீரான மதுரையில', 'தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடைநடந்து...' , 'ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே...', 'தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்' இப்படியான அனைத்து பாடல்களும் பாகப்பிரிவினை வெற்றி படமாக மாற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !